விடுதலையாகும் பணய கைதிகள் பட்டியல் வெளியீடு.. காசாவில் போர் நிறுத்தம் அமல்

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடை யேயான போர் 15 மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வருகிறது. இந்த போர் ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு அமலாகிறது. போர் நிறுத்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும்.

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் இன்று மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணிக்கு) அமலுக்கு வரவிருந்தது. ஒப்பந்தப்படி இரு தரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்களின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் இன்று விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்றே வெளியிட்டுவிட்டது.

ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பணய கைதிகளின் விவரங்கள் இன்று மதியம் 2 மணிவரை (இஸ்ரேல் நேரப்படி 10.30 மணி) வெளியாகவில்லை. இதனால், போர் நிறுத்தம் அமலுக்கு வராமல் இருந்தது. எனவே இதையடுத்து காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 108 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பணய கைதிகளான ரோமி கொனின் (வயது 24), ஏமி டமாரி (வயது 28), டோரன் ஸ்டான்பிரிசர் (வயது 31) ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

விடுதலை செய்யப்பட உள்ள பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் மதியம் 2.45 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி காலை 11.15 மணி) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *