தருமபுரி:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் தலைமையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்ததாவது:-
ஆண்டு தோறும் ஜனவரி 30-ம் தேதி அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக தொழுநோய் எதிர்ப்பு தினம் இருவார விழாவாக (30.01.2025 முதல் 15.02.2025 வரை) அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் ஜனவரி 30 அன்று நடத்துமாறும், அதில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வும் ஸ்பர்ஷ் உறுதிமொழி ஏற்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இருவார விழா நிகழ்ச்சியாக, அனைத்து அரசு துறை சார்பாக நடக்கும் கூட்டங்களில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு தொடுவது, சுடுவது மற்றும் வலிப்பதை உணரமுடியாத, சிவந்த, வெளிர்ந்த உணர்சியற்ற தேமல் உள்ளதா என மருத்துவக்குழு மூலம் பரிசோதனை செய்து தொழுநோய் அறிகுறி உள்ளவர்கைளை கண்டறியுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
மேலும், தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம்-2025 மத்திய மாநில அரசுகளால் தேர்வு செய்யப்பட்ட கடத்தூர், ஏரியூர், மாரண்டஹள்ளி ஆகிய வட்டாரங்களில் 13.02.2025 முதல் 28.02.2025 வரை வீடு வீடாக சென்று கணக்கெடுத்து தொழுநோய் அறிகுறிகள் கண்டறியும் சர்வே பணி நடைபெற உள்ளது.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவள்ளி, தருமபுரி மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் சாந்தி, துணை இயக்குநர் (தொழுநோய்) புவனேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி, தருமபுரி துணை இயக்குநர் (காசநோய்) பாலசுப்பிரமணியம் மற்றும் திட்ட அலுவலர் ஊட்டசத்து, கள விளம்பர உதவியாளர் மற்றும் பல்வேறு அரசு துறை மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.