தீர்மானம்: 1
முன்னாள் பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைவிற்கும், புதுக்கோட்டை சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி அவர்கள் மறைவிற்கும், தேமுதிக நாமக்கல் தெற்கு முன்னாள் மாவட்ட கழக செயலாளர் திரு.ஆர்.கே.ராமலிங்கம் அவர்கள் மற்றும் மறைந்த கழக தொண்டர்களுக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்து, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தீர்மானம்: 2
கழகத்தின் கொடி நாள் 12.02.2025 25ஆம் ஆண்டு “வெள்ளி விழாவை” முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமந்தோறும் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 3
அண்ணா பல்கலைக் கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகரனை வன்மையாக கண்டிப்பதோடு, காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தாலும், அந்த “சார்” (SIR) யார் என்று இன்னும் கண்டுபிடித்து தெரியபடுத்தவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக ஞானசேகரனுக்கு உதவிய “சாரை” கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 4
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் என்று அறிவித்த போதிலும், நாள் தோறும் விற்பனை அதிகரித்துகொண்டே தான் போகிறது. இதனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாலை விபத்து, போன்ற சம்பவங்கள் நடந்தேறிவருவது தொடர்கதையாக இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக மது மற்றும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 5
கடலோரம் வாழும் மீனவர்கள் தங்கள் பிழைப்பிற்காக, மீன் பிடி தொழிலை செய்து வருகிறார்கள். கடலில் மீன் பிடிக்கும் பொழுது எல்லை தாண்டிவிட்டதாக கூறி மீனவர்களை கைது செய்வது இல்லாமல், துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடலோர காவல் படையினர் மீனவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு கான “கச்சத்தீவை மீட்டு” எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 6
தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற திமுக ஆட்சியில் பல்வேறு மாவட்டங்களில் (தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, வேலூர்) கனிம வளக் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை போன்ற கனிம வளங்களை பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவிற்கு கடத்தி கொண்டிருக்கின்றனர். இதை வன்மையாக தேமுதிக சார்பில் கண்டிக்கிறோம். இதுபோதாது என்று திமுக அரசு மீண்டும் 13 மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறக்க தேர்வு செய்திருப்பதை தேமுதிக கண்டிப்பதோடு இல்லாமல், தேர்வு செய்த மணல் குவாரிகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேறப்படுகிறது.
தீர்மானம்: 7
தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இரண்டு மாதமாக நிவாரணத் தொகை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறப்படுகிறது.
தீர்மானம்: 8
மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்களுக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒன்று கூடி கேப்டன் உருவப்படம் நிறுவிய “தேர்” ஒன்றை தயாரித்துள்ளார்கள். தேரை ஒருமாதத்திற்கு பிறகு கேப்டன் ஆலயத்தில் நேரடியாக ஒப்படைக்க உள்ளார்கள். கேப்டன் மீது பற்று வைத்து, தேரை தயாரித்த இலங்கையில் வாழும் தமிழ் பெருமக்களுக்கு, கழக பொதுச் செயலாளர் திருமதி.அண்ணியார் சார்பாகவும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பாகவும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 9
புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனையில், அந்த சமூதாயத்தை சேர்ந்தவர்களே அந்த செயலை செய்ததாக மூன்று பேரை கைது செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த சம்பவத்தை காவல் துறை திசை திருப்ப முயற்ச்சி செய்கிறது என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். எனவே உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை வேண்டும் என தேமுதிக கேட்டுக்கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 10
தமிழநாடு முழுவதும் குண்டும், குழியுமாக இருக்கின்ற சாலைகளை உடனடியாக சரி செய்து வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதிப்படி பாதுகாப்பான சாலைகளை அமைத்து தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறப்படுகிறது.