மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவக்கம்.

தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, மக்களை அரசு திசைதிருப்பி வரும் நிலையில், பிற தென்னிந்திய மாநிலங்களில் மும்மொழி கொள்கை இருந்தும் தமிழ்நாடு அரசு அதனை ஏற்க மறுத்து இருமொழிக் கொள்கைக்காக பேசிக் கொண்டு வருவது நியாயமற்றது.

மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியாக ஏதேனும் இந்திய / பன்னாட்டு மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது எனும்போது அதை அரசு மறுப்பதற்கு முக்கிய காரணமாக போதிய ஆசிரியர்கள் இல்லை, ஆசிரியர்களை நியமிப்பது முடியாத காரியம் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த நவீன காலக்கட்டத்தில் 50 வருடங்கள் பின்னோக்கிய சிந்தனையை என்னவென்று சொல்வது? கொரோனா காலத்தில் 2 வருடங்கள் மாணவர்கள் பள்ளிக்கே சென்று படிக்க முடியாத சூழல் இருந்தும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டன. அதுபோன்று, மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்த வாரத்திற்கு 2 – 3 தினங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்திட பிற மொழி கற்ற ஆசிரியர்களை நியமித்து வாய்ப்பை உருவாக்கலாம்.

எந்தவொரு செயல்திட்டமும் முடியாது, நடக்காது என்று சொல்வது எந்தவகையில் நியாயம்? மும்மொழி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வேறு என்ன சிரமம் இருக்கிறது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் எவரும் இருசாரார் கருத்தையும் கேட்டோ, அறிக்ககளை படித்தோ கருத்து சொல்வதில்லை. இதில் மையத்தை சார்ந்தவர்கள் இருமொழி கொள்கைக்காக உயிர்விடலாம் என கருத்து தெரிவிப்பதை என்னவென்று சொல்வது? மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி விஷயத்தில் மக்களை தூண்டிவிடுவது அறிவார்ந்த செயல் அல்ல.

தமிழ் வளர்க்கிறோம் என்பவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ், ஆங்கிலம் மட்டும் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்த்து தமிழை வளர்க்கலாமே? உலக அரங்கில் பிரதமர் மோடி அவர்கள் தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்து வருகிறார். ஆனால், தமிழரின் பன்மொழிகற்கும் திறனுக்கு முட்டுக்கட்டையாக, தமிழக மாணவர்களின் சம உரிமையை பறிக்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது.

அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் இருமொழிக்கொள்கையில் தான் படிக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? எளிய மாணவர்களின் சம உரிமையை, கல்வி உரிமையை மீட்டெடுப்பதற்காக குரல் கொடுத்து வரும் எங்கள் குரல்களை நசுக்க நினைப்பதும், மாணவர்கள் வளர்ச்சியை தடுக்க நினைப்பதும் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது.

தமிழ்நாட்டில் இயங்கும் பல தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப்பாடமாக இல்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இப்படியே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி, அரசுப்பள்ளிகளை மூட வேண்டும் என நினைக்கிறீர்களா? அரசுப்பள்ளியின் தரம் உயர்த்த அரசு என்ன முயற்சி எடுத்தது?

இந்த கேள்விக்கெல்லாம் எப்போதும் நேரிடையாக திராவிட அரசு பதில் அளித்தது இல்லை. மத்திய அரசு பாடத்திட்டம் என்றாலும் தமிழகத்தில் தமிழ் பாடம் கட்டாயம் என்றும், இருமொழி மட்டுமே அனுமதிப்போம் என்றும் அனைத்து பள்ளிகளிலும் அறிவிக்கலாமே? எங்கள் உரிமை என பேசும் நீங்கள் முன்பே ஏன் மும்மொழியை தனியார் பள்ளிகளில் அனுமதித்தீர்கள்? கடந்த நான்கு வருட ஆட்சியில் எத்தனை புதிய அரசு பள்ளி கட்டப்பட்டது என்பதை தெளிவுபடுத்த முடியுமா? எத்தனை தனியார் பள்ளி கட்ட அனுமதி அளிக்கப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்த முடியுமா? கல்வி அனைவருக்கும் சமமாக, பொதுவாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி என்பது எப்படி சமத்துவம் ஆகும்?

எத்தனை மொழி படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களும், மாணவர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பை அரசு தான் உருவாக்க வேண்டும். அதை விடுத்து அரசுப்பள்ளி மாணவர்களிடம் நீ இருமொழிக்கொள்கை தான் படிக்க வேண்டும். உன் தகுதிக்கு இது போதும் என்பது போல் அணைகட்டி, உங்கள் வியாபார தேவைக்காக அவர்கள் வளர்ச்சியை தடுக்கக்கூடாது.

மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜகவின் சார்பாக கையெழுத்து இயக்கத்தை, சம கல்வி இணையதளம் வாயிலாக இன்று துவங்கி இருக்கிறார்கள். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெருவாரியாக மக்களை பங்குபெறச் செய்து ஆதரவு திரட்டுவோம்.

அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரை முதன்மைப்படுத்தி இந்த கையெழுத்து இயக்கம் வாயிலாக மாணவர்களின் எதிர்காலத்திற்கு எது தேவை என்ற மக்களின் மனநிலையை, உண்மைநிலையை அரசுக்கு எடுத்துரைத்து மும்மொழிக் கொள்கையை நிறைவேற்ற பாடுபடுவோம்.

நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்

ரா.சரத்குமார்

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *