பிரம்ம குமாரிகளின் 2025-26 – ம் ஆண்டிற்கான ‘உலக ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான தியானம்’ என்ற விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 2025 நவம்பர் 28 அன்று நடைபெற்ற 2025-26 – ம் ஆண்டிற்கான ‘உலக ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான தியானம்’ என்ற பிரம்ம குமாரிகளின் வருடாந்திர கருப்பொருளின் வெளியீட்டு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார்.
நவீன காலத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வலிமையால், மனிதகுலம் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

இன்று தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம், விண்வெளி ஆய்வு ஆகியவற்றின் சகாப்தமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இத்தகைய புரட்சிகரமான மாற்றங்கள் மனித வாழ்க்கையை மிகவும் வசதியாகவும், எளிதாக அணுகக்கூடியதாகவும், வளங்கள் நிறைந்ததாகவும் மாற்றியுள்ளன என்று கூறினார்.
இன்றைய உலகில் மனிதர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக கல்வியறிவு பெற்றவர்களாகவும், தொழில்நுட்ப ரீதியாக திறமையானவர்களாகவும் உள்ளனர் என்றும், முன்னேற்றத்திற்கான பல்வேறு வாய்ப்புகளையும் கொண்டுள்ளனர். இருப்பினும், சமூகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், மன அழுத்தம், மனதளவில் பாதுகாப்பின்மை போன்ற உணர்வு, அவநம்பிக்கை மற்றும் தனிமை ஆகியவையும் அடங்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்த தருணத்தில், நாம் முன்னேற்றம் அடைவது மட்டுமின்றி, சுயபரிசோதனை செய்து கொள்வதும் அவசியம் என்று அவர் தெரிவித்தார். நம்மை நாமே தொடர்பு கொள்ளும்போது, அமைதியும் மகிழ்ச்சியும் வெளிப்புறத்தில் உள்ள எந்தப் பொருளிலும் இல்லை என்றும், அவை நம்மிடத்திலேயே உள்ளது என்பதை நாம் உணர்கிறோம் என்றார். ஆன்மீக உணர்வு விழித்தெழும்போது, அன்பு, சகோதரத்துவம், கருணை மற்றும் ஒற்றுமை போன்ற குணநலன்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறும் என்று குறிப்பிட்டார். அமைதியான மற்றும் நிலையான மனம், சமூகத்தில் அமைதியின் விதைகளை விதைக்கிறது என்றும், உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அடித்தளம் இடப்படுவதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். உலகளாவிய ஒற்றுமை என்ற கருத்தை உணர்ந்து கொள்வதற்கு ஒரு வலுவான மனப்பான்மை அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார்.
உலக அமைதி, மனித விழுமியங்கள், பெண்கள் அதிகாரமளித்தல், ஆன்மீக விழிப்புணர்வு, கல்வி மற்றும் தியானம் ஆகிய துறைகளில் பிரம்ம குமாரிகளின் முயற்சிகள் உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார். இந்த அமைப்பின் அனைத்து சகோதரிகளும் சகோதரர்களும் சிறந்த, அமைதியான மற்றும் நம்பகமான உலகை உருவாக்குவதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்
